ஆக்கிரமிப்பில் நீர்வழிப் பாதைகள்: நீர் நிரம்பாத நகரக் குளங்கள்

திருவாரூரில் குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப்பாதைகள் அடைபட்டதால், ஆற்றில்..
ஆக்கிரமிப்பில் நீர்வழிப் பாதைகள்: நீர் நிரம்பாத நகரக் குளங்கள்


திருவாரூர்: திருவாரூரில் குளங்களுக்குச் செல்லும் நீர்வழிப்பாதைகள் அடைபட்டதால், ஆற்றில் தண்ணீர் இருந்தும் குளங்களில் தண்ணீர் நிரம்பாத நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குளங்கள் உருவாக்கப்பட்டன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குளங்கள், அவர்களின் குடிநீர் தேவையையும், இதர பயன்பாட்டுத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள், கூடுதலாக விவசாயத் தேவையையும் பூர்த்தி செய்கின்றன. ஆறுகளில் தண்ணீர் வரும் காலங்களில், குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படுவது மட்டுமன்றி, மழை அதிகமாக பெய்யும்போது, அதிகப்படியான நீர் இந்த குளங்களில் சேகரமாகும்.

அதேநேரம் குளங்களில், கொள்ளும் மடை வழியாக தண்ணீர் நிரம்பினால், வெள்ளக் காலங்களில் அதிகப்படியான நீர் வெளியே செல்வதற்கு குளங்களில் வடிகால் பாதை அமைக்கப்படும். திருவாரூரில் தனியார் மற்றும் அரசுக் குளங்கள் என சுமார் 80 குளங்கள் உள்ளன என பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், பெரும்பாலான குளங்கள் காணாமல்போனதோடு, சில குளங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, குறுகி விட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, பல நாள்களைக் கடந்தும், திருவாரூர் நகரப் பகுதிகளில் உள்ள குளங்கள் ஏதும் நிரம்பவில்லை. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழைநீர் கூட குளத்துக்கு வாய்க்கால் மூலமாக செல்லவில்லை. குளத்தில் நேரடியாக விழும் மழைநீரால், சில குளங்களில் தண்ணீர் காணப்படுகிறது.

திருவாரூர் மையப் பகுதியில் உள்ளது குளுந்தான்குளம். தொடக்கத்தில் சுமார் 13 ஏக்கரில் இருந்ததாகக் கூறப்படும் இந்த குளம் தற்போது, சில ஏக்கர் அளவுக்கு குறுகி விட்டது. ஓடம்போக்கி ஆற்றிலிருந்து, சிறிய வாய்க்கால் பிரிந்து அழகிரி நகர், பனகல் சாலை வழியாக இந்த குளத்துக்கு வருகிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாததாலும், பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாலும், இந்த குளம் பல ஆண்டுகளாகவே தண்ணீர் இல்லாத நிலையே காணப்படுகிறது.

இதேபோல், நேதாஜி சாலையில் உள்ள பஜனை மடத்தெரு சந்தைவெளிக்குளம். மிகப்பிரசித்திப் பெற்ற இந்த குளக்கரையிலிருந்து, மருதப்பட்டினம் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, சுவாமி வீதியுலா, காவடி உள்ளிட்டவை செல்வது கடந்த 100 ஆண்டுகளைக் கடந்து செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த படித்துரையானது, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு அசைவ உணவகமாக செயல்பட்டு வருகிறது. திருவிழா காலத்தின்போது மட்டும், அந்த கடை இயங்காது. பிரசித்தி பெற்ற குளம், தனது பாரம்பரிய வழக்கங்களை இழந்து வருவது சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த குளம் கூட, தூர்வாரப்பட்ட குளங்கள் கணக்கில் வருவது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமன்றி, ஐநூற்றுப்பிள்ளையார் குளம், ஆத்தா குளம், மருதப்பட்டினம் குளம், கொடிக்கால்பாளையம் குளம் என பிரசித்திப் பெற்ற பல்வேறு குளங்கள் தண்ணீர் இல்லாமல், காட்சிப்பொருளாகவே உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி இயக்குநர் சி. செல்வக்குமார் கூறியது:

திருவாரூரில் நகராட்சி கட்டுப்பாட்டில் 52 குளங்கள் இருந்ததாக பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது 30 -லிருந்து 40 வரையிலான குளங்களே உள்ளன. அதுவும், பயன்பாட்டில் இல்லாத நிலையில் காணப்படுகின்றன. அதில், 10 -க்கும் மேற்பட்ட குளங்கள் முழுவதும் காணாமல்போய்விட்டன. 20 -க்கும் மேற்பட்ட குளங்கள் பாதியளவு காணாமல் போய்விட்டன.

நகராட்சி தரப்பில் சுமார் 17 குளங்கள் வரை தூர்வாரியதாக தெரிவிக்கின்றனர். தூர்வாரப்பட்ட குளங்களும், குளம் என்ன அளவில் இருந்ததோ அந்த அளவை கணக்கில் எடுத்து தூர்வாரவில்லை. இதனால், ஆக்கிரமிப்புக்குள்ளான குளங்களின் பகுதிகள் ஏதும் அகற்றப்படாமலேயே தூர்வாரப்பட்டுள்ளன. இதேபோல், இந்த குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்கள் ஏதும் தூர்வாரப்படவில்லை. 

நுகர்வோர் அமைப்பு சார்பில் இதுகுறித்து நகராட்சியில் கேட்டபோது, குளங்கள் மட்டுமே நகராட்சி கட்டுப்பாட்டில் வருவதாகவும், வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் வருவதாகவும் தெரிவித்தனர் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஜி. பழனிவேலு: வறட்சியைத் தீர்க்கவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் திருவாரூர் நகர்ப் பகுதிகளில் ஏராளமான குளங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்துமே முறையான பராமரிப்பு இல்லாததால், பாழாகி கிடக்கின்றன. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்போதும், கோடை காலத்திலும் மட்டுமே குளங்கள் விவாதப்பொருளாக உலா வருகின்றன. மற்ற நேரங்களில், யாரும் இதுகுறித்து கவலைப்படுவதில்லை என்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நவாஸ்: கொடிக்கால்பாளையத்தில் சுமார் 7 குளங்கள் வரை உள்ளன. இவை அனைத்திலுமே இன்னமும் தண்ணீர் வரவில்லை. ஆனால், பெரும்பாலான குளங்கள் சாக்கடை நீரால் நிரம்பி வருகின்றன. இதற்குக் காரணம், குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களை தூர்வாராததே என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com