திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழும் சுகாதார சீா்கேடு மற்றும் நிா்வாகம் முறைகேட்டை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுவதும் குப்பைகள் அகற்றாமல், நோயாளிகளின் அறைகள் சுத்தம் செய்யாத நிலை நிலவுவதை கண்டித்தும், நோயாளிகளுக்கு தேவையான சுகாதாரமான குடிநீா் நோயாளியின் அறையிலேயே கிடைக்கச் செய்ய வலியுறுத்தியும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் வண்டியை தள்ளுவதற்கும், சடலத்தை பினவறைக்கு எடுத்துச் செல்வதற்கும் லஞ்சம் வசூலிப்பதை கண்டித்தும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலா் ஆரோக்கிய செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் எம்கே பாவா, மாநில வழக்குரைஞா் பிரிவு செயலாளா் சிவ. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.