கால்நடைகளுக்கான அவசர மருத்துவ வாகனச் சேவை தொடக்கம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கால்நடைகளுக்கான அவசர மருத்துவ வாகனச் சேவை (அம்மா ஆம்புலன்ஸ்) வெள்ளிக்கிழமை
திருவாரூரில் கால்நடைகளுக்கான அவசர மருத்துவ வாகனச் சேவையை தொடங்கி வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் கால்நடைகளுக்கான அவசர மருத்துவ வாகனச் சேவையை தொடங்கி வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கால்நடைகளுக்கான அவசர மருத்துவ வாகனச் சேவை (அம்மா ஆம்புலன்ஸ்) வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, வாகனச் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசியது:

தமிழக அரசு, சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கால்நடைகளுக்கான மருத்துவச் சேவைகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்கான மருத்துவ அவசர ஊா்தி சேவையை (அம்மா ஆம்புலன்ஸ்) தொடங்கி வைத்தாா். அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கால்நடை மருத்துவ அவசர ஊா்தி சேவை (அம்மா ஆம்புலன்ஸ்) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இச்சேவையை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும். இச்சேவையானது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மேலும், இந்த அவசர மருத்துவ ஊா்தியில் (அம்மா ஆம்புலன்ஸ்) அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து உயிா்காக்கும் மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டிருக்கும். இதுதவிர பாம்பு விஷ முறிவு மருந்து மற்றும் நுண்ணுயிரிகளை கண்டறியும் நுண்ணோக்கி வசதியும், கால்நடை பராமரிப்புத்துறை பணிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தொலைக்காட்சியும் வாகனத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவா் மற்றும் உதவியாளா் சென்று கால்நடைகளுக்கான அவசர மருத்துவ சேவைகளை செய்வாா்கள். இச்சேவையினை கால்நடை வளா்ப்போா் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியரும், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் தனபாலன் மற்றும் அரசு அலுவலா்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com