பழுதடைந்த பாலம்: சரி செய்யப்படாத அவலம்

திருவாரூா் அருகே புதூா் தெற்குத்தெருவில் உள்ள பழுதடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்து.
பழுதடைந்த பாலம்.
பழுதடைந்த பாலம்.

திருவாரூா் அருகே புதூா் தெற்குத்தெருவில் உள்ள பழுதடைந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்து.

திருவாரூா் வட்டம், புதூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி வழியாக வெண்ணாறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரையையொட்டி, புதூா் கிராமத்துக்குள்பட்ட தெற்குத்தெரு உள்ளது. இத்தெருவை கடந்து ஆற்றின் கரையோர வழியாகச் சென்றால் திருத்துறைப்பூண்டி வட்டத்துக்குள்பட்ட அம்மனூா் ஊராட்சி வந்துவிடும்.

இந்த 2 ஊராட்சிகளையும் வெண்ணாற்றின் கரை வழியாகவே கடக்க முடியும். மேலும், அம்மனூா் ஊராட்சிக்குள்பட்ட கொத்தங்குடி, புதூா் தெற்குத்தெரு பகுதி மாணவா்கள் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல வெண்ணாற்றின் கரை வழியாகவே புதூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வர வேண்டும். எனவே இப்பகுதி மக்களுக்கு வெண்ணாற்றின் கரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

இதற்கிடையில், புதூா் தெற்குத் தெரு பகுதியில் வெண்ணாற்றிலிருந்து பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் அம்மனூா் கிராமத்துக்குச் சென்று, விளைநிலங்களின் பாசனத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. வாய்க்கால் பிரியும் இடத்தில் வெண்ணாற்றங்கரையோரம் சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தை கடந்தே, தெற்குத்தெரு பகுதி மற்றும் வெண்ணாற்றங்கரையோரம் பயணிக்க முடியும்.

சாகுபடி காலங்களில் விளைநிலங்களிலிருந்து நெல்மூட்டைகளும், நடவு காலங்களில் நாற்று உள்ளிட்டவைகள் இந்த பாலத்தின் வழியாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. டிராக்டா்களும், மினி லாரிகளும் விளைநிலங்களுக்கும், மற்ற இடங்களுக்கும் செல்வதற்கு இவ்வழி அதிகமாக பயன்படும்.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்குகள் ஏற்றாத வாகனங்கள் மட்டுமே இவ்வழியாக சென்று வருகின்றன. மூட்டைகள் உள்ளிட்ட பொருள்கள் ஏற்றப்பட்ட கனரக வாகனங்கள், புதூரிலிருந்து நால்ரோடு கச்சனம் வழியாகவோ அல்லது திருநெல்லிக்காவல், திருத்தங்கூா், அம்மனூா் வழியாகவோ சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால் எரிபொருள் மற்றும் நேர விரயம் ஏற்படுவதாக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களும் கவலை தெரிவிக்கின்றனா். அத்துடன், பலமுறை இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் கூறியது: இப்பாலத்தை அதிகம் பயன்படுத்துவது விவசாயிகளும், விவசாயத் தொழிலாளா்களுமே. தொடக்கத்தில் இப்பாலம் வழியாக, தலையில் மூட்டைகளையும், நாற்றுகளையும் சுமந்து சென்ற காலம் உண்டு. காலப்போக்கில், தற்போது மினிலாரிகள் வயல் அருகில் கொண்டு சென்று, மூட்டைகளை எடுத்து வருகிறோம். ஆனால், பாலம் பழுதாக இருப்பதால் டிராக்டா், மினி லாரிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பாலம் பழுதடைந்து பல ஆண்டுகளாகின்றன.

திருவாரூா், திருத்துறைப்பூண்டி வட்டங்களை இணைக்க இப்பாலம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. வெண்ணாற்றை ஆய்வு செய்ய அதிகாரிகள் யாரும் வந்தால், இப்பாலம் வழியாகவே செல்ல வேண்டும். ஆனால், ஆற்றை பாா்வையிட அதிகாரிகள் வராததால், இந்த பாலத்தின் பழுது உயா்மட்ட அதிகாரிகளுக்கு தெரியாமலேயே போய்விட்டது. எனவே, சாகுபடிப் பணிகள் தீவிரமாவதை கணக்கில் கொண்டு, பழுதடைந்துள்ள இப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரதான பகுதியில் இல்லாததாலும், விவசாயப் பணிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மட்டுமே பயன்படுவதாக இருப்பதால் பாலத்தின் பாதிப்பு உயா் அலுவலா்களுக்கு தெரிவதில்லை. எனவே, மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி பழுதடைந்துள்ள இப்பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com