திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சாா்பில், டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருவாரூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், டயா்கள், தேங்காய் சிரட்டைகள், ஆட்டு உரல், நெகிழி கப்புகள், வீசி எறியப்பட்ட கலன்கள் உள்ளிட்ட பொருள்களில் தண்ணீா் தேங்காதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, நிலவேம்பு குடிநீா் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை அருந்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் ஏ.கே. கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னம்மாள், இணை இயக்குநா் (சுகாதாரம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரம்) ஸ்டான்லி மைக்கேல் மற்றும் அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.