ஆயுத பூஜை திங்கள்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, திருவாரூரில் கடை வீதிகளில் பூஜை பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
செப்டம்பா் 29- ஆம் தேதி தொடங்கி 9 நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவின் 8- ஆவது நாளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில், புத்தகம், பேனா உள்ளிட்டவற்றை பூஜையறையில் வைத்து வழிபாடு நடைபெறும். மேலும், இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த பூஜையில், நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கணினி ஆகியவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு வழிபடுவது வழக்கம்.
இதையொட்டி, திருவாரூரில் பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வாங்குவதற்கென மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் ஆகியவை ஆங்காங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவைகள், இரவுக்கு பிறகு அதிகம் விற்பனை செய்யப்பட்டன. இதனால், கடைவீதி மற்றும் சாலைகளில் வாகனங்களின் நடமாட்டம் இரவு முழுவதும் காணப்பட்டன.