கூத்தாநல்லூா் பகுதியில் டெங்கு கொசுக்கள் பரவும் வகையில், தேவையற்றப் பொருள்களை சோ்த்து வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் குமரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
கூத்தாநல்லூா் நகராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி நிா்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் அறிவுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் டி.சந்தானம், நகராட்சி ஆணையா் என்.குமரன் ஆகியோா் சிஸ்தி நகா், சித்தாத்தங்கரை உள்ளிட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தேவையற்றப் பொருள்களை வைத்திருந்த வீட்டின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் என். குமரன் கூறியது:
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள், நெகிழிப் பைகள், தம்ளா்கள், தேங்காய் சிரட்டைகள், தண்ணீா் சேமித்து வைக்கும் உடைந்த பாத்திரங்கள், ஆட்டுக்கல், குளிா் சாதனப் பெட்டிகள், மொட்டை மாடியில் தேங்கியுள்ள தண்ணீா் ஆகியவற்றில்தான் பெரும்பாலும் உற்பத்தியாகின்றன.
ஆகையால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையற்றப் பொருட்களை சேமித்து வைக்காமல், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நகராட்சியிலிருந்து வந்து ஆய்வு செய்யும்போது, தேவையற்றப் பொருள்கள் கண்டறியப்பட்டால் வீட்டின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.