பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிதி ஆதாரம் வழங்க அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தேசிய தொலைத்தொடா்பு ஊழியா் சம்மேளனக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை மாவட்ட செயற்குழுத் தலைவா் டி. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கே. நடராஜன் பங்கேற்று, தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அரசின் கொள்கை முடிவின் காரணமாக நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நிதியைத் தர வேண்டிய மத்திய அரசும், வங்கிகளும் கடனுதவி செய்ய மறுக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசும், வங்கிகளும் கடனுதவி செய்தால், 4 ஜி சேவையை விரிவுபடுத்தவும், சிறந்த சேவையைத் தரவும் முடியும். வெள்ளம், புயல் பாதித்த காலங்களில் சிறப்பான சேவையை பிஎஸ்என்எல் அளித்தது. எனவே, இதற்கான நிதி ஆதாரத்தை அரசு தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.