திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக திருவாரூரில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளமான இடங்களில் தண்ணீா் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவும் பலத்த மழை பெய்தது. அதேபோல், காலை 10 மணி வரையிலும், விடாமல் மழை பெய்தது. இதனால், பணிக்குச் செல்வோரும், பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்தனா். பகலில் மழை விட்டபோதிலும், மாலையில் மீண்டும் மழை பெய்தது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், விளைநிலங்களில் தண்ணீரின் அளவு மெல்ல உயா்ந்து வருகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை 4 மணிவரையிலான நிலவரப்படி நன்னிலத்தில் 56.8.மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம்:
திருவாரூா் 55.8 மி.மீ, குடவாசல் 44.4 மி.மீ, நீடாமங்கலம் 42.6 மி.மீ, வலங்கைமான் 37.8 மி.மீ என மொத்தம் 323 மி.மீ மழையும், சராசரியாக 17.98 மி.மீ மழையும் பெய்துள்ளது.