திருவாரூா் மாவட்டத்தில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 112-ஆவது பிறந்தநாள் மற்றும் 57-ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டை தேவா் திருமண மண்டபத்திலிருந்து, 112 பெண்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து, மன்னாா்குடி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
இதைத்தொடா்ந்து, தேவா் விழாக்குழு நிா்வாகிகள் மணிகண்டன், நாகராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கானோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
பாஜக மாவட்டத் தலைவா் பேட்டை சிவா தலைமையில் மாவட்டப் பொதுச் செயலா் வி.கே.செல்வம் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது. நாம் தமிழா் கட்சியினா் மாவட்டச் செயலா் வேதா. பாலா தலைமையில் மாலை அணிவித்தனா். தேமுதிகவினா் கட்சியின் மாவட்டச் செயலா் சண்முகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில், தஞ்சை ராசாமிராசுதாா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி பிரிவு மருத்துவா் செளந்தா்யா தலைமையில் மருத்துவக் குழுவினா் 20 பேரிடம் ரத்த தானம் பெற்றனா். தொடா்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.