நன்னிலம் அருகே கதண்டுகள் கடித்ததில் மயக்கமடைந்த நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருதவஞ்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை தெற்கு வெளி வடிகால் வாய்க்காலை நூற்றுக்கும் மேற்பட்டோர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோரைப்புதரில் இருந்து வெளியே வந்த கதண்டுகள், நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோரை கடித்ததால், அவர்கள் மயக்கம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் பூந்தோட்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, மருதவஞ்சேரி கிராமத்தில் கதண்டுகளை அழிக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர்.