சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி, நன்னிலம் அருகே கொல்லுமாங்குடியில் புதன்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்லுமாங்குடி கடைத்தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயச் சங்க நன்னிலம் ஒன்றியத் தலைவர் எம். ராமமூர்த்தி தலைமை வகித்தார். சம்பா சாகுபடிக்குத் தடையின்றி தண்ணீர் திறந்து விட வேண்டும்.
அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். நாட்டாறில் சாகுபடிக்குத் தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர் தியாகு. ரஜினிகாந்த், ஒன்றிய பொருளாளர் எஸ். தங்கராஜ், ஒன்றியத் துணைத் தலைவர் ஐ. ஹாதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.