திருவாரூர் அருகே சுரங்கப் பாதையில் தேங்கிய தண்ணீரை, மோட்டார் மூலம் அகற்றும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கூடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழகூத்தங்குடியில் ரயில்வே கீழ் பாலம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, காட்டாற்றில் சென்ற தண்ணீர் சுரங்கப் பாதைக்குள் புகுந்தது. இதனால், இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்து, திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையிலான அதிகாரிகளும், ரயில்வே அதிகாரிகளும் தண்ணீர் தேங்கிய சுரங்கப் பாதையை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதையடுத்து மோட்டார் பொருத்தி, தண்ணீரை அகற்றும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டது.