தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
வலங்கைமான் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவர் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
ஆவூர் கிராமம் காந்திநகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த நேசமணி மகன் சாது (25). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது கணவன் சாதுவிடம் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து, மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக சாது கடந்த 10-ஆம் தேதி அங்கு சென்றார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சாது கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வலங்கைமான் போலீஸார் வழக்குப் பதிந்து, ஐஸ்வர்யாவை முதல்கட்டமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரது தங்கை கணவர் கவியரசனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.