நீடாமங்கலம் அருகே இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
ரிஷியூரைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகள் சாதுர்யா (24). இவருக்கும், வலங்கைமான் அருகேயுள்ள வேப்பத்தாங்குடி சாமிநாதன் மகன் மணிபாலனுக்கும் (32) கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 2 மாதத்தில், மணிபாலன் சிங்கப்பூர் சென்று விட்டார். தனது மாமியார் வீட்டில் வசித்து வந்த சாதுர்யா, வியாழக்கிழமை இரவு தூக்கில் பிணமாகத் தொங்கினார். வலங்கைமான் போலீஸார் அவரது பிரேதத்தைக் கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சாதுர்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சினை கொடுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறி அவரது பெற்றோர் வலங்கைமான் போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.