திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கமங்கலத்தில், ஆபத்தை விளைவிக்கும் மரணப் பாலத்தை சீர்செய்ய வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் தொடங்கியதால், சங்கமங்கலம் வழியே கொல்லாபுரம் செல்லும் மக்களின் வசதிக்காக தற்காலிக மணல்மேடு அமைக்கப்பட்டது. இந்நிலையில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி தற்காலிக மணல்மேடுகளை அகற்ற வேண்டுமென விவசாயிகளிடமிருந்து கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, மணல்மேடு அகற்றப்பட்டு, சிமென்ட் குழாய்கள் போட்டு அவசரகதியில் வெறும் மண்ணைக் கொட்டி புதிய பாதை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் ஓட்டம் அதிகரிக்க, அதிகரிக்க புதிய பாதையில் போடப்பட்டிருந்த மண் கரைந்து, அந்த பாதை ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால், இந்த வழியாக நான்கு சக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பகலில் கூட நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகனத்தில் செல்வோரும் சாகசப் பயணம் மேற்கொள்ள நேரிடுகிறது.
பாலம் உடைந்து இருப்பதை உணர்த்தும் வகையில், மரக்கிளைகள் போடப்பட்டுள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படும் முன்பாக இந்த தற்காலிக பாலத்தை சீர்செய்ய வேண்டுமென வாலிபர் சங்கத்தின் நன்னிலம் ஒன்றிய செயலாளர் பி.ஜெயசீலன், ஒன்றிய தலைவர் வரத.வசந்தபாலன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.