கூத்தாநல்லூர் பகுதியில் போக்குவரத்து காவலர்களை நியமிக்கக் கோரிக்கை
கூத்தாநல்லூர் பகுதியில் போக்குவரத்துக் காவலர்களை நியமிக்க வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, சட்ட உரிமைகள் கழக மாநில துணை விசாரணை அமைப்பாளர் டீ. பீர்முஹமது விடுத்துள்ள கோரிக்கை: கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி உள்ளிட்ட இடங்கள் பொதுமக்கள் அதிகமுள்ள நெரிசலான பகுதிகளாகும். மேலும், இப்பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்தியன் வங்கி செயல்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகின்றனர். எனவே, இப்பகுதியில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க வேண்டும், கூத்தாநல்லூருக்கு என தனியாக போக்குவரத்து காவல் துறை வாகனம் வழங்க வேண்டும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்தி, மாணவிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,
புதிய பேருந்து நிலையத்தில் மதுக்குடிப்பவர்களை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் பணியாற்ற மருத்துவர்களை உடனே நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.