நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒழுங்குமுறை நேரடி நெல் விதைப்பு குறித்த செயல் விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவத்திற்காக நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, வேளாண்மையில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகளின் அனுபவங்களை சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில், ஒழுங்குமுறை நேரடி நெல் விதைப்பு முறை குறித்து செயல் விளக்கம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் மு. ராமசுப்பிரமணியன் தலைமையில் வேளாண்மை அறிவியல் நிலையப் பண்ணையில் நடைபெற்றது. இந்த முகாமில், தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி ரமேஷ், தான்கண்டுபிடித்த புதிய முறையில் நேரடி நெல் விதைப்பு முறை குறித்து கூறியது:
ஒழுங்குமுறை நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் விதைகள் மக்கும் காகிதத்தில், குறிப்பிட்ட இடைவெளியில் (அதாவது 25 செ.மீ.) வைக்கப்படுகிறது. இது நேரடியாக வயலில் சிறிய கருவி மூலம் விதைக்கப்படுகிறது. இந்த முறையில் ஓர் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு ஒருவர் போதுமானது. விதையளவு ஏக்கருக்கு 3-5 கிலோ தேவைப்படுகிறது. மேலும், கோனோ வீடர் மூலம் களை எடுப்பதால் வேலையாட்களின் தேவை குறைகிறது. இம்முறையில் நீர் பாசனத்தின் அளவு குறைக்கப்படுகிறது. ஒழுங்குமுறை நேரடி நெல் விதைப்பு முறையில் மகசூல் அதிகரிக்கப்படுகிறது.
இந்த சாகுபடி முறை தழிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், பல்லடம் போன்ற பகுதிகளில் சிறிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.