திருவாரூர் மாவட்டம், கண்டமங்கலம் பகுதி விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து, மன்னார்குடி அருகே உள்ள கீழச்சேரியில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோட்டூர் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தில் 417 ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இதற்காக, மழவராய நல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2018-2019-ஆம் ஆண்டுக்கானப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு
செய்திருந்தனர்.
இந்நிலையில், கண்டமங்கலம் கிராமத்தில் கஜா புயலால் நெற்பயிர்கள் பெரிதும் சேதமடைந்தன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்ற கிராமங்களுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கண்டமங்கலம் விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து, கோட்டூர் வேளாண்மை அலுவலரிடம், கண்டமங்கலம் பகுதி விவசாயிகள் பலமுறை நேரில் சென்று முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 2017 - 2018- ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையும் கண்டமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள், மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் கீழச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோட்டூர் காவல் ஆய்வாளர் அறிவழகன் மற்றும் போலீஸார், நிகழ்விடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.