தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 64-ஆவது அகில இந்திய பள்ளிக்குழுமம் நடத்தும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியின் 19 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேர்வு மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து, 53 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியை, மாயூரம் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சி.பன்னீர்செல்வம் வரவேற்றார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எம்.சாந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இதில், ஆண்கள் பிரிவில், 55, 61, 67, 73, 81, 89, 96, 102, 109 மற்றும் 109 கிலோவுக்கு கூடுதல் ஆகிய 10 பிரிவுகளிலும், பெண்கள் பிரிவில் 45, 49, 55, 59, 64, 71, 76, 81, 87 மற்றும் 87 கிலோவுக்கு கூடுதல் ஆகிய 10 பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெற்றன.
இத்தேர்வில், ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 36 மாணவர்களில் 8 மாணவர்களும், பெண்கள் பிரிவில் பங்கேற்ற 17 மாணவிகளில் 9 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற உள்ள அகில இந்திய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். இதில், உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், பிரபாகர், நாகை மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் ஜெகதீஸ், சாய் பயிற்றுநர் கபீர்கான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் சிவகுருநாதன் நன்றி தெரிவித்தார்.