தரச்சான்று பெற்ற தீவனங்களை மீன்களுக்கு வழங்க வேண்டும் என மீன் பண்ணையாளர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னீர் மீன்வளர்ப்புக்கு நன்னீர் மீன்களுக்கான தீவனமும், இறால் மீன் பண்ணைகளுக்கு இறால் தீவனமும், அதாவது அனைத்து சத்துக்களும் புரோட்டின், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், தாது உப்புகள் அகியவை கலந்து சரிவிகித கலவை தீவனமாக மீன்களுக்கு வழங்கப்பட வேண்டும். செயற்கை முறையில் தயாராகும் மீன் மற்றும் இறால் தீவனங்கள், இந்திய தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற்ற தீவனங்களில் புரதம், கொழுப்பு, மாவு, விட்டமின்கள் ஆகிய அனைத்து சத்துக்களும் கொண்டதாக இருக்கும்.
இது மீன்கள் நன்கு வேகமாக வளரவும், உயிர் பிழைப்பு திறன் அதிகம் உள்ளதாக இருக்கவும் உதவுகிறது. குறிப்பாக, குளத்தின் சுற்றுச்சுழல் மாசுபடாதபடி, எளிதில் நீரில் கரையாமல் இருக்க வேண்டும். இத்தகைய இந்திய தரச்சான்றிதழ் பெற்ற உணவுகளை கண்டறிந்து, மீன் மற்றும் இறால் வளர்ப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
கெண்டை மீன்களுக்கு மிதவை தீவனம், மூழ்கும் தீவனம், கலவை தீவனம் பயன்படுத்தலாம். திலேப்பியா மீன்களுக்கு மிதவை தீவனம் பயன்படுத்தலாம். இதை தவிர கெட்டுப்போன காய்கறிகள், இறைச்சிகள், அழுகிய பயன்படுத்தாத உணவு பொருட்கள், இறந்த விலங்குகள், அழுகிய முட்டைகள் இவற்றை பயன்படுத்துவது குளத்தின் சுற்றுச்சூழல், நீரை மாசுபடுத்துவதோடு உண்பவருக்கு நோயை விளைத்துவிடும்.
எனவே, மத்திய மீன்வளத்துறை உத்தரவுபடியும், சென்னை மீன்வள இயக்குநர் அறிவுரையின்படியும், கெண்டை மீன்கள், கெழுத்தி மீன்கள் மற்றும் நன்னீர், உவர் நீர் இறால் வளர்ப்புப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் தீவனங்கள் இந்திய தரச்சான்று பெற்றதாக இருக்க வேண்டும்.
ஆகவே, திருவாரூர் மாவட்ட கெண்டை மீன் வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பு, கெண்டை மீன்குஞ்சு, பொறிப்பக விவசாயிகள், விரால் மீன் பண்ணையாளர்கள், கிப்ட் திலேப்பியா பண்ணையாளர்கள், நன்னீர் உவர்நீர் இறால் பண்ணை உரிமையாளர்கள் அனைவரும் இந்திய தரச்சான்று பெற்ற தீவனங்களைப் பயன்படுத்த வேண்டும் அந்த செய்திக்குறிப்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.