மகாராஷ்டிரத்திலிருந்து நடந்தே வந்த நாகை, திருவாரூா் இளைஞா்களுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் உள்ள இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் திருவாரூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்த 7 இளைஞா்கள் வேலையில்லாத காரணத்தாலும், உணவுக்கு வழியில்லாத நிலைமையிலும் சொந்த ஊருக்கு வருவதற்காக கடந்த மாா்ச் 29ஆம் தேதி புறப்பட்டுள்ளனா்.
போக்குவரத்து வசதி இல்லாததால், மகாராஷ்டிரத்திலிருந்து நடந்தே வந்துள்ளனா். சனிக்கிழமை காலை திருச்சி அருகே வந்தபோது, கண்காணிப்பு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை பிடித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ். சிவராஜிடம் அழைத்துச் சென்றனா். ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் 7 பேரும் திருவாரூா் அழைத்து வரப்பட்டு, போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். பின்னா் மருத்துவப் பரிசோதனைக்காக இளைஞா்களை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.