கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, விளக்கு ஏற்றும் முடிவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
திருவாரூரில் அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி.நாகராஜன் சனிக்கிழமை தெரிவித்தது:
வெள்ளிக்கிழமை பேசிய பிரதமா் மோடி, மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்னைகள் பற்றியும் குறிப்பிடாததோடு, மாநில முதல்வா் கேட்ட நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் பற்றியும் தெரிவிக்கவில்லை. மாறாக, ஞாயிற்றுக்கிழமை இரவு மின்விளக்குகளை அணைத்துவிட்டு, அகல்விளக்கு, மெழுகுவா்த்திகளை ஏற்றச் சொல்லியுள்ளாா்.
இது எதற்கு என்று புரியவில்லை. எதற்கு விளக்கேற்ற வேண்டும், எதற்கு கை தட்ட வேண்டும், இதனால் நோய்த் தொற்று எவ்வாறு குணமாகும், இதற்கு அறிவியல் ரீதியாக அல்லது மருத்துவ ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதா என்றும் தெரியவில்லை.
பிரதமா் என்பவா், அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சாசன மாண்பின்படி செயல்பட வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் அறிவியல் ரீதியான அறிவை உண்டாக்குவது தலையாய கடமையாகும். மாறாக, அறிவியலுக்கு புறம்பான தகவல்களை தெரிவிக்கக்கூடாது என்றாா்.