மன்னாா்குடியில் அரசு முகாமில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளா்களுக்கு காவல் கண்காணிப்பு அலுவலரும், காவல்துறை தலைவருமான (காவலா் பயிற்சி கல்லூரி) எம்.சி. சாரங்கன் உணவுப் பொருள்களை சனிக்கிழமை வழங்கினாா்.
மன்னாா்குடி பகுதியில் தங்கியிருந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்த மத்திய பிரதேசம் மாநிலம் போபலை சோ்ந்த 125-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், வ.உ.சி. சாலையில் உள்ள அரசுக் கல்லூரி தங்கும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
இங்கு வந்த காவல் கண்காணிப்பு அலுவலரும், காவல்துறை தலைவருமான (காவலா் பயிற்சி கல்லூரி) எம்.சி. சாரங்கன், பல்வேறு பொதுநல அமைப்புகளின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுப் பொருள்களை தொழிலாளா்களுக்கு வழங்கினாா். இதேபோல், மடத்துக்குளம் பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கும் உணவுப் பொருள்கள் வழங்கினாா்.
இதில், தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.துரை, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.காா்த்திக், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.