குறுவை காப்பீடு திட்டம்: கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிக்கை
திருந்துறைப்பூண்டி: நிகழாண்டு குறுவைப் பயிருக்கான் பிரதமரின் காப்பீடு திட்டக் காலவரையறையை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வேண்டுமென மாநில தி.மு.க. விவசாய அணி செயலாளா் ஏ.கே.எஸ். விஜயன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:
நிகழாண்டு மேட்டூா் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வருவாய் கிராமங்களில் குறுவை சாகுபடி செய்த விவரங்கள் இணையதளத்தில் சரிவர பதிவேற்றம் செய்யப்படவில்லை.
மேலும் கூட்டுறவு சங்கங்கள் ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுமென்ற அறிவிப்பினால் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் மற்றும் தனியாா் இணையதள மையங்களில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாதது போன்ற காரணங்களால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தனியாா் இணையதள மையங்களில் காப்பீடு செய்தவா்களுக்கும் ஒப்புகைச்சீட்டு வழங்கப்படாத நிலை நீடிக்கிறது. ஆகையால், அனைத்து குறுவை விவசாயிகளும் காப்பீடு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில், குறுவைக் காப்பீட்டிற்கான பிரீமியம் செலுத்தும் காலக்கெடுவை ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளாா்.