மன்னார்குடி அருகே கடன் கேட்டு தர மறுத்த தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
கோட்டூர் சன்னதி தெருவை சேர்ந்த செல்வராஜ், சுசிலா தம்பதியரின் மகன்கள் சிவக்குமார் (36). முருகவேல் (26). சிவக்குமாருக்கு திருமணம் ஆகியும் எந்த வேலைக்கு செல்லாமல் வீண் தகராறில் ஈடுப்பட்டு வருவதால், அவர் மீது கோட்டூர் காவல் நீலையத்தில் வழக்குகள் உள்ளது. முருகவேலுக்கு திருமணம் ஆகவில்லை. இவர், கட்டுமானப் பணிக்கு கூலி வேலைக் சென்று வருகிறார்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சிவக்குமார் செலவுக்கு தேவைப்படுவதாக ரூ.3 ஆயிரம் கடன் தருமாறு கேட்டதற்கு முருகவேல் கடன் தர மறுத்தாராம். இது தொடர்பாக, இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதில் முருகவேல் காயமடைந்தார். உடனே அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கொலையான கூலித் தொழிலாளி முருகவேல்
அங்கு, பணியிலிருந்த மருந்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே முருகவேல் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் சுசிலா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து, இரவே சிவக்குமாரை கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர்.