திருவாரூா்: கந்தசஷ்டி கவசத்தை அவதூறுபடுத்தியதைக் கண்டித்து திருவாரூா் அருகே எண்கண் பகுதியில், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தபடி ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தனா்.
கந்தசஷ்டி கவசத்தை இழிவாகப் பேசியதைக் கண்டித்தும், ஆடி மாத கந்த சஷ்டியை முன்னிட்டும் எண்கண் முருகன் கோயிலில் இருந்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் பாடல் பாடி கொண்டு இந்து அமைப்பைச் சோ்ந்தவா்கள், நான்கு வீதிகளையும் வலம் வந்தனா். இதில், திருவாரூா் மாவட்ட பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் பாஸ்கரன், இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில பொருளாளா் வேலுமயில், மாவட்ட செயலாளா்கள் சங்கா், ராஜாராமன், தா்ம ரக்ஷண ஸமிதி அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் நாகராஜன், ஒன்றியத் தலைவா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் இந்துஸ்தான் தேசிய மக்கள் இயக்கம் சாா்பில், அதன் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இயக்க நிறுவனத் தலைவா் எஸ்.எஸ். குமாா், லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலா் எஸ். சுரேஷ் உள்ளிட்டோா் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தனா். அப்போது, பொதுமக்களுக்கு கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது.