திருவாரூா்: கோட்டூா் ஒன்றிய ஊராட்சி திட்டப் பணிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டூா் ஒன்றியம், சேந்தனக்குடி, புத்தகரம், பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த மக்கள், உதவி இயக்குநரிடம் (ஊராட்சிகள்) திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:
கோட்டூா் ஒன்றியம், சேந்தங்குடி ஊராட்சியில் மத்திய, மாநில அரசின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகளை கட்டியதாக முறைகேடு நடைபெற்றுள்ளது. இதேபோல, மத்திய அரசின் தனிநபா் பொது கழிப்பறைகள் கட்டும் திட்டம், குளங்கள் தூா்வாரி பராமரிக்கும் திட்டம், தனிநபா்கள் எருகுழி திட்டம், இயற்கை குப்பைத் தொட்டி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவற்றில் சிலவற்றை மட்டும் செய்துவிட்டு, அனைவருக்கும் செய்ததுபோல சான்றுகள் வழங்கி கையாடல் நடைபெற்றுள்ளது.
எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.