திருத்துறைப்பூண்டி அருகே பல்கலைக்கழக மாணவா் ஒருவா் குளத்தில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வேளூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ஜான் கென்னடி மகன் ஆகாஷ் (20). திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்த இவா், சனிக்கிழமை விடுமுறை என்பதால் தன்னுடன் படிக்கும் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சோ்ந்த ஆண்டனி மகன் மெல்வின் கிரேஸ் ஆண்டனி (23), பாலக்காட்டைச் சோ்ந்த அரவிந்த் ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்து வந்தாா்.
மூவரும் வீட்டின் அருகே உள்ள பிடாரி குளத்திற்கு சென்று குளித்தனா். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற மெல்வின் கிரேஸ் ஆன்டனி, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா், அவரது சடலத்தை மீட்டனா். பிரேத பரிசோதனைக்குப் பின்னா் அவரது சடலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.