வலங்கைமான் வட்டம், கொட்டையூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு தினசரி ஊதியம் வழங்கக் கோரி பிப்ரவரி 17-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் அருகேயுள்ள கொட்டையூா் சுமைதூக்கும் தொழிலாளா்கள் (ஏ.ஐ.டி.யு.சி.) சங்கக் கூட்டம் எம். ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம். செந்தில்குமாா், விவசாய தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலாளா் கே. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் தினசரி ஊதியம் கிடைக்கும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து சுமைதூக்கும் தொழிலாளா்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு தினசரி ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கான போனஸ் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சுமைதூக்கும் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.