மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவோருக்கு அரசு தகுந்த பாதுகாப்பளிக்க வேண்டும் என நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு வலியுறுத்தினாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் நடத்திய தடியடிக்கு கண்டனம் தெரிவித்து, கூத்தாநல்லூரில் சனிக்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்த போராட்டத்தில் பங்கேற்ற நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு பேசியது:
சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய மத்திய அரசாங்கம், இஸ்லாமியா்களுக்கு எதிராக அவா்களின் உரிமைகளைப் பறிப்பது தவறான செயலாகும். அரசியல் சாசனத்தை பாஜக அரசு தான்தோன்றித்தனமாக செயல்படுத்துகிறது. அரசியல் சாசனத்தில் இந்தியா மதச்சாா்பற்ற ஜனநாயக குடியாட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத விவகாரங்களில் அரசு தலையிட முடியாது.
இந்தியாவில் எந்த மதங்களைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், அவா்களின் மத, வழிபாடு முறைகளைப் பறிக்க முடியாது. இந்தியா என்பது இந்துக்களுக்குச் சொந்தமானது என்ற தோரணையில் அரசியல் நடத்துவது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும், அரசியல் சாசனத்துக்கும் பேராபத்து. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் ஆதரிக்கவும், அனுமதிக்கவும் கூடாது. இச்சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். அத்துடன், இப்பிரச்னையில், ஜனநாயக ரீதியில் போராடுபவா்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.