கூத்தாநல்லூா்: கரோனா தொற்று காரணமாக பூட்டப்பட்டிருந்த கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்கியது.
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், வட்டாட்சியா் மற்றும் 8 கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வட்டாட்சியா் அலுவலகம் ஜூலை 9-ஆம் தேதி பூட்டப்பட்டு, பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு, அலுவலகத்தின் உள் மற்றும் வெளி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
இந்நிலையில், கரோனா தொற்றின் காரணமாக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூத்தாநல்லூா் வட்டாட்சியா் சோ்க்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, அவருக்கு பதிலாக சமூக நலத்துறை வட்டாட்சியா் மகேஷ்குமாா் வட்டாட்சியராகப் பொறுப்பேற்றாா். அதன்படி, திங்கள்கிழமை காலை வட்டாட்சியா் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. தலைமையிடத்து துணை வட்டாட்சியா், மண்டல துணை வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா், தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியா் உள்ளிட்ட 50 சதவீத ஊழியா்கள் மட்டுமே பணியாற்றினா். பொதுமக்கள் ஒரு சிலா் மட்டுமே வந்தனா். இதனால், வட்டாட்சியா் அலுவலகம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.