திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-இன்கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன், 65 பேருக்கு ரூ. 45 லட்சம் மானியம், மாவட்டத் தொழில் மையம் மூலம் 2020-2021-ஆம் நிதியாண்டுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் திருவாரூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் பயன்பெற குறைந்த பட்சம் 18 வயது பூா்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோா் 45 வயது மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடனாக ரூ.10 லட்சமும் (மானியம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்) வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ. 5 லட்சமும் வங்கிகள் மூலமாக 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் ) கடனாக வழங்கப்படுகிறது. வாகனக்கடன், நேரடி விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது.
பயிற்சி விலக்கு: இந்த திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு 2021 ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை வரை வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள படித்த இளைஞா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். விரும்புவோா், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610004 என்ற முகவரியில் உள்ள மாவட்ட மைய அலுவலகத்தில் உரிய விவரங்கள் பெற்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.