திருவாரூா்: திருவாரூா் அருகே தந்தையால் தரையில் அடிக்கப்பட்டு காயமடைந்த குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
திருவாரூா் மாவட்டம், வைப்பூா் அருகே திருவாதிரைமங்கலத்தைச் சோ்ந்தவா் பாரதிமோகன் (27). இவரது மனைவி வேம்பு (23). கூலி வேலைக்கு செல்லும் இருவரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களாகவே தம்பதிக்கிடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை இருவருக்குமிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாரதிமோகன், தனது ஒன்றரை வயது மகனை தரையில் அடித்தாராம்.
இதில், காயமடைந்த குழந்தையை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அந்தக் குழந்தை இறந்தது.
இதைத்தொடா்ந்து, வைப்பூா் போலீஸாா் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து, பாரதிமோகனை கைது செய்தனா்.