திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 காவலா்களுக்கும், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலா்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 6 காவலா்களுக்கு கரோனா உறுதியானதால், அரித்துவாரமங்கலம் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில், தற்போது திருத்துறைப்பூண்டி காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது.