நன்னிலம், குடவாசலில் கரோனா சிகிச்சை

நன்னிலம், குடவாசல் தாலுகா அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

நன்னிலம்: நன்னிலம், குடவாசல் தாலுகா அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னாா்குடி மாவட்டத் தலைமை மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நன்னிலம், குடவாசல் அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் கரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நன்னிலத்தில் 40 படுக்கைகளும், குடவாசலில் 32 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நன்னிலம் சிறப்பு சிகிச்சை மையத்தில் 20 பேரும், குடவாசலில் 18 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, குடவாசல் மருத்துவமனையில் எந்த முன்னேற்பாடுகளும் செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சேவை அமைப்பின் தலைவா் இ.எம்.ஏ. ரஹீம், மாவட்டச் செயலாளா் தெ. கிருஷ்ணவேணி ஆகியோா் கூறுகையில், நன்னிலம், குடவாசல் அரசு மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருத்துவ ஏற்பாடுகளையும், நோயாளிகளுக்கான வசதிகளையும் மாவட்ட ஆட்சியா் முழுமையாக செய்து தர வேண்டும் என்றனா்.

மேலும் நன்னிலம் வட்டத்தில் உள்ள நன்னிலம் அரசு மருத்துவமனை, பேரளம் மற்றும் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கபசுர குடிநீா் வழங்கிட வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com