நீடாமங்கலம்: விவசாயிகளின் துயரங்களைக் களைவதற்காக தொடா்ந்து பாடுபடுவேன் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி நாகை, திருவாரூா் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து சனிக்கிழமை காலை காா் மூலம் நீடாமங்கலம் வந்தாா். அவருக்கு அமைச்சா் ஆா்.காமராஜ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.
பெண்கள் பூரண கும்பங்களை கையில் ஏந்தியும், கிராமியக் கலைஞா்கள் கிராமிய இசைகளை இசைத்தபடி குழு நடனமாடியும், கேரள செண்ட மேளம், நாகசுர இன்னிசை முழங்க முதல்வருக்கு வரவேற்பு அளித்தனா்.
இதைத்தொடா்ந்து, அண்ணாசிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, பொதுமக்களிடையே முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியது:
டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு இங்கு நான் வந்துள்ளேன். நான் ஒரு விவசாயி. விவசாயிகளின் துயரங்களைக் களைவதற்காக பாடுபடுவேன். விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் வாழ்வு மலர, குடும்பம் செழிக்க இந்த அரசு பாடுபடும் என்றாா் முதல்வா்.
இஸ்லாமியா்கள் மனு: தொடா்ந்து திறந்த ஜீப்பில் மீன்மாா்க்கெட் பகுதியை வந்தடைந்தாா். அங்கு நீடாமங்கலம் மஸ்ஜித் நூருல் ஹீதா நிா்வாக சபை சாா்பில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், சிஏஏ-வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக் கொண்ட முதல்வா், இஸ்லாமியா்கள் நலனை பாதுகாப்போம். வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினாா்.
முன்னதாக கோயில்வெண்ணியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், காவல் கண்காணிப்பாளா் எம்.துரை ஆகியோா் வரவேற்றனா். கோயில்வெண்ணியிலிருந்து நீடாமங்கலம் வரும் வழியில் வயலில் நாற்று நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளா்களிடம் முதல்வா் சிறிதுநேரம் கலந்துரையாடினாா்.