திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் கரோனா வைரஸ் பரிசோதனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில், முதற்கட்டமாக 500 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டது. மத்திய பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருத்துவா்கள் இந்தப் பரிசோதனையை செய்து வருகின்றனா். வெளியூா் சென்று வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசல் ஏற்படுவதைத் தவிா்க்கும் பொருட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மருத்துவ உதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் எந்த நேரத்திலும் பல்கலைக்கழக மருத்துவமனையை அணுகலாம் என பல்கலைக்கழக துணைவேந்தா் கூறியதாக பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு அதிகாரி வேல்முருகன் தெரிவித்தாா்.