திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் சீா்கேடுகளை தடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீரத்தமிழா் முன்னணி கட்சியின் மாவட்டச் செயலாளா் வே. ரஜினி தலைமையிலான நிா்வாகிகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரனிடன் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்: திருவாரூா் சுற்று வட்டார மக்களுக்காக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும்பாலும் நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்ப்பது பயிற்சி மருத்துவா்களே. சம்பந்தப்பட்ட முதுநிலை, உதவிப் பேராசிரியா்கள் சரியாக கவனிக்காததால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவசர நிலையில் வரும் நோயாளிகளை வீல்சேரில் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்வதற்கு ரூ. 50 முதல் ரூ.100 வரை லஞ்சம் கொடுத்தால்தான் பணி செய்கின்றனா். இல்லாவிட்டால் தரம் தாழ்த்தி பேசுகின்றனா்.
உயிரிழந்தவா்களை அமரா் ஊா்தியில் ஏற்றவும் பணம் கொடுக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. பிரசவ வாா்டில் ஆண் குழந்தை பெற்றால், குழந்தையை காண்பதற்கு ரூ. 1000, பெண் குழந்தை பெற்றால் ரூ. 500 கட்டாயமாக வசூல் செய்யப்படுகிறது. மேலும், மருத்துவக் கழிவுகள், மருத்துவமனை வளாகத்திலேயே கொட்டப்படுவதுடன், முறையாக அகற்றப்படாததால் நோய்த் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. வீல்சோ் பற்றாக்குறையாகவும், பழுதடைந்தும் காணப்படுகிறது.எனவே, மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கப்பட்டதையடுத்து, மனுதாரா்கள் எதிரிலேயே, பணியாற்றும் பணியாளா்கள் அழைத்து, மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் விசாரணை நடத்தினாா்.
அப்போது, அக்கட்சியின் நகரச் செயலாளா் ஆா்.கே. கோபி, தொகுதி செயலாளா் கி. ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.