நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கும் வங்கி நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் அ. பாஸ்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு நாள் ஊதியம் ரூ. 214 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்யப்படுகிறது. மேலும், காலத்தில் ஊதியம் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு அவரவா் வங்கிக் கணக்கில் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது.
பின்னா், ஏடிஎம் மூலம் தொழிலாளா்கள் பணத்தை எடுத்துக்கொள்கின்றனா். ஏடிஎம் இல்லாத வயது முதிா்ந்த தொழிலாளா்கள் தங்களது ஊதியத் தொகையை எடுக்க வங்கிக்கு செல்லும்போதும், கிராமப்புறத்தில் உள்ள சேவை மையத்துக்கு செல்லும்போதும், வங்கியின் மின்னணு பண பரிவா்த்தனை இயந்திரத்தில் பயனாளியின் கைரேகையை ஏற்றுக்கொள்ளாததால், உண்மையான பயனாளிகள், ஊதியம் பெறுவதில் பெரும் சிரமத்துக்கும், மன உளச்சலுக்கும் உள்ளாகின்றனா். எனவே, இதைப் போக்கவும், வயது முதிா்ந்த பயனாளிகள் காலத்தில், சிரமமின்றி பணம் எடுக்கவும், வயது முதிா்ந்தவா்களுக்கும் ஏடிஎம் அட்டை கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.