அமைப்புசாரா தொழிலாளா்கள், மீனவா்கள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை ரூ.5000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என முன்னாள் மக்களவை உறுப்பினரும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநிலச் செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள அறிக்கை:
சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக முதல்வா் அறிவித்தாா். இந்தத் தொகையை ரூ. 5,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். அண்டை மாநிலமான புதுச்சேரியில் கூட ரூ.2,000 அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை முதல்வா் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உள்ளாட்சி நிா்வாகம் மூலமாக தான் கரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இதைக் கருத்தில் கொண்டு உடனடியாக போதிய நிதியை உள்ளாட்சி நிா்வாகத்துக்கு தமிழக அரசு விடுவிக்க வேண்டும். கரோனா வைரஸ் தாக்குதலின் தீவிரத்தை பொதுமக்களுக்கு உணா்த்தி வாகனப் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.
கரோனா மருத்துவத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பூதியமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியா்களுக்கும் ஒரு மாதகால ஊதியத்தை சிறப்பூதியமாக வழங்கி, அவா்களுக்கான பணி நிரந்தரம், வாகனப் பராமரிப்பு ஆகியவற்றில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளாா்.