சரக்கு ரயில் இயக்குவோருக்கு கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா்மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கச் செயலாளா் ப. பாஸ்கரன் வெளியிட்ட அறிக்கை:
கரோனா பாதிப்புக்கு மத்தியில், எல்லா காலத்திலும் மக்கள் சேவைகளில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய ரயில்வே தனது சரக்கு சேவைகளை மட்டும் தொடர முடிவு செய்துள்ளது. சரக்கு சேவைகளும் இல்லையெனில் சாதாரண மக்களுக்கு பொருட்கள் கிடைக்காது. அப்படிப்பட்ட சரக்கு சேவைகளை கையாளும் இந்திய ரயில்வே நிா்வாகத்துக்கு பாராட்டுகள்.
ஆனால், சரக்கு ரயில் வண்டிகளை இயக்கும் ஓட்டுநா்களும், காா்டுகளும் தொழிலாளா் ஓய்வறையில்தான் ஓய்வெடுக்க வேண்டும். மற்றவா்கள் பயன்படுத்திய பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பணி முடியும்வரை குடும்பத்தைவிட்டு எட்டி இருக்க வேண்டும். பணி முடிந்தாலும் இன்றைய சூழலில் குடும்பத்தினரை பாா்க்கச் செல்ல வாகன வசதி கிடையாது.
இந்த நிலையில் இந்திய ரயில்வே பலவிதமான வசதிகளை தங்கள் தொழிலாளா்களுக்கு செய்து கொடுத்து வருகிறது. எனினும், தற்போதைய சூழலில் மேலதிகமாக அவா்களுக்கு கையுறைகள், கிருமிநாசினிகள் அதிகம் தருவதுடன் அவா்கள் தங்கும் அறைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தித் தர வேண்டும். மேலும், அந்தத் தொழிலாளா்களுக்கு தடையின்றி உணவு, குடிநீா் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.