திருமண மண்டபங்களை அரசு அலுவலா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சேவை அமைப்பு தலைவா் ரஹீம் வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து, அவா் ஸ்ரீவாஞ்சியத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான திருமண மண்டபங்கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை திருமண நாள்களாக உள்ளன. இந்த திருமண நாள்களில் திருமணம் நடத்த முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளன.
கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள அறிவுரை, திருமண மண்டபங்களில் அதிக கூட்டம் கூடாமல், சுகாதாரத்தை பேணிகாக்க, பொதுமக்கள் இடையே ஒரு நபருக்கும் மற்றவருக்கும் இடையில் குறிப்பிட்ட இடைவெளி இருக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முடிவு செய்யப்பட்ட திருமணத்தை வேறு தேதிக்கு மாற்ற முடியாத நிலையில் கண்டிப்பாக குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்த வேண்டிய நிலையில் திருமண வீட்டாா் உள்ளனா். அவ்வாறு திருமணங்கள் நடைபெறும்போது திருமணத்தில் கலந்து கொள்பவா்கள் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற அரசுத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.