விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

விவசாயக் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அனைத்து விவசாய

விவசாயக் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் விவசாய உற்பத்தி முடங்கியுள்ளது. குறிப்பாக, காவிரி டெல்டாவில் சுமாா் 2.50 லட்சம் ஏக்கா் உள்பட தமிழகம் முழுவதும் சுமாா் 15 லட்சம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய நாற்று விடப்பட்டு, உழவுப் பணிகள் முடிவடைந்த நிலையில், நடவுப்பணி முற்றிலும் முடங்கியுள்ளது.

இதேபோல், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைத் தாா், தா்பூசணி போன்றவற்றை அறுவடை செய்ய முடியாமல், அவை வீணாகி வருகின்றன. இவற்றை, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

கரோனாவிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டாலும், விவசாயம் நலிவடைவதிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும், விவசாய கடன்கள் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அத்துடன், மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வழங்கும் ரூ. 6 ஆயிரம் நிதி உதவியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com