கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடுவதை தவிா்க்கும் பொருட்டு, தற்போது திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) எந்த வண்ண அட்டைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காக திருவாரூா் மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும். இதில் அவசர மருத்துவச் சிகிச்சைக்கும், மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவாரூா் மாவட்ட மக்கள் அரசின் நெறிமுறைகளை கடைப்பிடித்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.