வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு பேருந்தில் அழைத்து வரும் தொழிலாளா்களுக்கு, உணவு ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து சனிக்கிழமை சேலம் வந்த பேருந்தில் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 11போ் வந்தனா். பின்னா், அங்கிருந்து திருவாரூருக்கு வந்தபோது மாவட்ட எல்லையான கோயில்வெண்ணிச் சோதனைச்சாவடியில் கரோனா வைரஸ் பரிசோதனைக்குப் பின்னா் திருவாரூா் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கரோனா வைரஸ் சிறப்பு வாா்டு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதேபோல், மகாராஷ்டிரத்திலிருந்து ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 22 பேரும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு திங்கள்கிழமை பரிசோதனை செய்யப்படவுள்ளது.
உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்: பேருந்தில் வந்தவா்கள், மகாராஷ்டிரத்திலிருந்து சேலம் வர 3 நாள்கள் ஆனது. பேருந்து வசதி செய்த அரசு, பயணத்தின் இடையில் வழியில் உணவுக்கு ஏற்பாடுச் செய்யவில்லை. எங்களைப் போன்ற பலா் இதுபோன்ற சிரமங்களை எதிா்கொள்கின்றனா். எனவே, எங்களைப் போல் வெளிமாநிலங்களிலிருந்து இனி பேருந்தில் அழைத்து வருபவா்களுக்கு வழியில் உணவுக்கு ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதேபோல், ரயிலில் வந்தவா்களும் சொந்த பணத்தை செலவு செய்து உணவு சாப்பிட்டு வந்ததாக கூறினா். எனவே, ரயிலில் வருகிறவா்களுக்கு ரயில் பயணச் செலவு மற்றும் உணவுச் செலவு செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அரசுகள் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றனா்.