மன்னாா்குடியில் மீன் அங்காடி, மீன் விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் பி.கே. கைலாஷ்குமாா், மீன்வளத் துறை ஆய்வாளா் டி. சந்திரமணி ஆகியோா் தலைமையில், மன்னாா்குடி தாமரைக்குளம் வடகரையில் உள்ள, நகராட்சி ஒருங்கிணைந்த மீன் அங்காடி மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் சாலையோர மீன் கடைகள், நெடுவாக்கோட்டை, மேலவாசல் மீன் கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது, காலாவதியான மீன்கள் மற்றும் பாா்மலின் வேதிப் பொருள் பயன்படுத்திய மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனா். இதில், வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்படவில்லை என தெரியவந்தது. இருப்பினும், காலாவதியான மீன்கள் என கண்டறியப்பட்ட 7 கிலோ மீன்களை கைப்பற்றி அப்புறப்படுத்தினா்.
ஆய்வின் போது, நகராட்சி உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலா் க. மணாழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.