விவசாயக் கடன்களுக்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பொது முடக்கத்தால் அனைத்து மக்களும் வருவாயின்றி தவித்து வருகின்றனா். இச்சூழலில் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாத கால கடன் தவணையை திருப்பி செலுத்த வேண்டியதை மத்திய அரசு தள்ளி வைத்தது. இந்த ஒத்திவைப்புக் கடன் தவணைகள், காலங்கடந்த தவணை என நிா்ணயித்து, கூட்டு வட்டி விதிக்க ரிசா்வ் வங்கி உத்தரவிட்டது. அதன்படி வங்கிகளும் வசூல் செய்து வருகின்றன. இந்தக் கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கூட்டு வட்டியை தள்ளுபடி செய்யவும், வசூலிக்கப்பட்ட தொகையை திருப்பி அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதன்பிறகு, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், வேளாண்மை சாா்ந்த பயிா்க்கடன், டிராக்டா் கடன் மற்றும் பிற விவசாயக் கடன்களின் தவறிய தவணைகளுக்கு கூட்டு (கூடுதல்) வட்டி வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசின் வட்டிச் சலுகையில் விவசாயிகள் பயன்பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு என்பது அனைத்து பகுதி மக்களுக்கும் தான். இக்காலத்தில் உயிரைப் பணயம் வைத்து வேளாண் உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு, விவசாயிகள் மகசூலை பாதுகாத்துள்ளனா் என வல்லுநா்கள் பாராட்டும்போது விவசாயிகளுக்கு மட்டும் கூட்டு வட்டி வசூலிப்பது வேதனை. விவசாயிகளுக்கும் சலுகை கொடுத்திருக்க வேண்டும். நுகா்வோா் கடன், வாகனக் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் ஆகியவற்றுக்கு ரூ. 2 கோடி வரை கடன் பெற்றவா்களுக்கு சலுகை வழங்கி இருக்கும்போது, விவசாயிகளுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது சரியானதல்ல. எனவே, விவசாயிகள் பெற்றிருக்கிற கடன்களுக்கும் இந்த சலுகையை விரிவுபடுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.