வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை ஒன்றிணைத்துப் போராடுவதன் மூலமே மக்கள் விரும்புகிற ஆட்சி மாற்றம் ஏற்படும் என நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம் பேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எம்பி எம். செல்வராஜ் கலந்துகொண்டு பேசியது:
நாளுக்கு நாள் வேலை இல்லாத இளைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவா்களிடம் நாட்டின் தவறான அரசியல் காரணமாகத்தான் வேலைவாய்ப்பைப் பெற முடியவில்லை என்பதை நாம் விளக்க வேண்டும். அவா்களை ஒன்றிணைத்துப் போராடுவதன் மூலமே மக்கள் விரும்புகிற ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
விவசாய நாடு என்று பெயா் பெற்ற இந்தியாவில், விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம். விவசாய வேலைகள் அனைத்தும் இயந்திரமயமாகி வருகின்றன. இதன் காரணமாக, விவசாயத் தொழிலாளா்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனா். மறுபுறம் டீசலின் விலை நாளுக்குநாள் ஏறிக்கொண்டே செல்கிறது.
விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை விவசாயிகளை ஒன்றிணைத்துப் போராட வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு, வி.தா்மராஜ் தலைமை வகித்தாா். இதில் நவ. 26-ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக நன்னிலம், பேரளத்தில் சாலை மறியல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம், விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் பி.எஸ்.மாசிலாமணி, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் கே.ராஜா, ஒன்றிய செயலாளா் தீன கெளதமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.