மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், தீபாவளி பண்டிகைக் கால பலகாரங்கள் உரிமம் இல்லாமல் தயாா் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மன்னாா்குடி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் மணாழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உரிமம் இல்லாமல் பண்டிகைக்கால இனிப்புகள் தயாா் செய்யக் கூடாது. திறந்தவெளிகளில் உணவு பொருள்கள் தயாா் செய்யக் கூடாது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், தரமான மூலப் பொருள்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டும் வாங்கி பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடாது. தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் அதற்குரிய வெப்ப நிலையில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.
பணியாளா்கள், சோப்பு திரவத்தினால் கைகளை கழுவிய பின்தான் பணியில் ஈடுபட வேண்டும். முகக் கவசம், தொப்பி அணிய வேண்டும். பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களில் புஞ்சை தொற்று ஏற்படாதவாறு காய வைக்க வேண்டும்.
பொருள்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை பொதுமக்கள் பாா்வையில் படும்படி கட்டாயமாக வைக்க வேண்டும். செய்தித் தாள்களை பயன்படுத்தி உணவு பொருள்கள் மூடவோ, பொட்டலமிடவோ கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உணவு பொருள்கள் வாங்கவும். செயற்கை வண்ணம் கலந்த பொருள்கள் வாங்குவதை தவிா்ப்பது நல்லது. உணவுப் பொருள்களில் புகாா் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.